(Abortion Side Effects Tamil Health)
ஒரு பெண்ணுக்கு அபார்ஷன் உடல் அளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஒருசில காம்ப்ளிகேஷன்களை ஏற்படுத்தக்கூடிய அபார்ஷன் ஒன்றும் சாதாரண விஷயமில்லை. எனவே, அபார்ஷன் என்ற முடிவை எடுக்கும் முன்பு நூறு தடவை யோசிப்பது நல்லது. இதைத் தடுப்பது அதைவிட நல்லது. அபார்ஷனால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்துகொண்டால், இதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு தானாகவே வரும்.
கர்ப்பத்தை கணவனும், மனைவியும் சரியான நேரத்தில் பிளான் செய்யாததுதான் அபார்ஷனுக்கு முதல் காரணம். கருத்தரித்த பிறகு குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்ற சிந்தனையில் சில தம்பதிகள் இருப்பதுண்டு. இதனால் கடைசி நிமிஷத்தில் முடிவு எடுத்து அபார்ஷனில் கொண்டு நிறுத்தி விடுகிறார்கள். கருத்தரிக்கும் முன்பே குழந்தை அவசியமா? இல்லை தள்ளிப்போடலாமா என்று யோசித்து அதற்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.
கருத்தடை சாதனம் பயன்படுத்தாமல் கருத்தரித்து கணவனும், மனைவியும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அதை கலைக்க முடிவெடுத்தால், இரண்டரை மாதத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வதே பாதுகாப்பானது. கருக்கலைப்பு செய்து கொள்ளலாமா என்ற முடிவில், இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை தவறவிட்டு, மூன்று மாதத்தில் கருக்கலைப்பு மருத்துவரை அணுகினால், பாதிப்புகள் அதிகமாகிவிடுகிறது.
சரி… கருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய சில பின் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
* கருப்பையில் இரத்த கட்டிகள் (blood clots) ஏற்படக்கூடும்.
* கருப்பையிலும் அதைச் சுற்றியுள்ள இழைகளிலும் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்.
* ஒரே கலைப்பில் கரு கலையாமல் மறுபடியும் கருக்கலைப்பு செய்ய வேண்டிவரும்.
* கருப்பை வாயில் (cervix) கிழிந்து போகலாம். ஆனால், இதை தையல்கள் மூலம் சரிசெய்து விடலாம்.
* கருப்பை சுருங்காமல் அதீத இரத்தப்போக்கு ஏற்படும். அதிகப்படியான இரத்தப்போக்கினால் உடல் பலவீனமாகிப் போகும்.
* கருக்கலைப்பு முழுமையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை பதினான்கு நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்க்கத் தவறினால், கர்ப்பம் தொடரும் வாய்ப்பு உண்டு.
கருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், பாதிப்புகள் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். அவை…
* அதிகப் படியான வயிற்றுவலி.
* காய்ச்சல்.
* பீரியட்ஸ் சமயத்தில் அதீத இரத்தப்போக்கு, ரொம்பவும் தாங்கமுடியாத அதிகப்படியான இரத்தப்போக்கு இருந்தால்,
* கருக்கலைப்பு செய்துகொண்டப் பிறகும் கர்ப்பத்தின் அறிகுறிகள் தொடர்வது.
இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.
கருக்கலைப்பில் நீங்கள் யோசிக்க வேண்டிய மற்றுமொரு விஷயமும் உண்டு. கல்யாணமாகி உண்டான முதல் கருவைக் கலைத்தால், அடுத்து குழந்தைப் பேறு அடைவதில் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதைச் சரிப்படுத்துவதில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிவரும். அடுத்து, அடிக்கடி செய்யப்படும் கருக்கலைப்பினால் கருக்குழாயில் அடைப்புகள் ஏற்படலாம்.
ஒருமுறை கருக்கலைப்பு செய்துகொண்ட பின்பு அடுத்து ஆறு மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது. சில நேரங்களில் கருக்கலைப்பு அவசியம் தேவைப்படும். தாய்க்கு இருதய நோய், டயாபடீஸ், ஹைபர்டென்ஷன், பிறப்பு உறுப்பில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எபிலெப்ஸி, கருத்தரித்த நாளிலிருந்து கண்ட்ரோல் பண்ணமுடியாத வாமிட்டிங், இதுபோன்ற கேஸ்களில், தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவர்களே கருக்கலைப்புக்குப் பரிந்துரைப்பார்கள்.
இந்தச் சூழ்நிலையில் கருக்கலைப்புக்குச் சம்மதிக்காமல் போனால், தாயின் உயிருக்குப் பாதகமாகிவிடும். இதுபோன்ற கேஸ்களில் கர்ப்பத்தைத் தொடரவிட்டால், குழந்தை மனவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் குன்றியே பிறக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்!
TAGS : Abortion Side Effects Tamil Health, Women Health Tips in Tamil, Women Pregnancy Tips in Tamil
<<MORE POSTS>>
பெண்களின் கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மாதுளம் பழம்
உடல் எடையை குறைக்க உதவும் சோயா பீன்ஸ்
ஆண்களின் தொங்கும் தொப்பையைக் கரைக்க சில எளிய வழிகள்!